கோவையில் 5 நாட்கள் நடைபெறும் அக்ரி இன்டெக்ஸ் வேளாண் கண்காட்சி: 150 கோடி ரூபாய் வருவாய் இலக்கு

கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 11 முதல் 15 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் அக்ரி இன்டெக்ஸ் 2024 வேளாண் கண்காட்சியில் 498 அரங்குகள் அமைக்கப்படும். சர்வதேச பங்கேற்புடன் 150 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் "அக்ரி இன்டெக்ஸ் 2024" என்ற தலைப்பில் 22-வது ஆண்டு வேளாண் கண்காட்சி சர்வதேச அளவில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி வரும் ஜூலை 11 ஆம் தேதி துவங்கி 15 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.



இது குறித்து கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் கூறியதாவது: "வழக்கமாக நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டு ஐந்து நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், நான்கு நாட்கள் போதிய அளவில் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்ததன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது."

"இந்த கண்காட்சிக்காக 498 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மலேசியா, சிங்கப்பூர், சீனா, தென்கொரியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் இந்த கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். மேலும், ஜப்பான் நாட்டிலிருந்து சிறப்பு வேளாண் குழுவினரும் கண்காட்சியைப் பார்வையிட்டு, அவர்களுடைய பல்வேறு தொழில்நுட்பங்களை எடுத்துக் கூற உள்ளனர்."

"விவசாயிகள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்தி லாபம் பெற முடியும், அதற்கான வழிமுறைகள், தேவையான ஆலோசனைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. மேலும், கால்நடைகளுக்கு தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் தொழில்நுட்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன."

"தமிழக அரசு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் வேளாண்துறை மற்றும் மத்திய அரசு ஆகியவை ஒருங்கிணைந்து இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன. சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கண்காட்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கண்காட்சி மூலம் 150 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...