மேட்டுப்பாளையத்தில் இருந்து பழங்குடியினர் கிராமங்களுக்கு புதிய பேருந்து சேவை: எம்.பி. ஆ.ராசா துவக்கி வைத்தார்

நீலகிரி எம்.பி. ஆ.ராசா, மேட்டுப்பாளையத்திலிருந்து பழங்குடியினர் கிராமங்களுக்கு புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்தார். இந்த சேவை மூலம் பல கிராமங்கள் பயனடையும்.


கோவை: நீலகிரி மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து பழங்குடியினர் கிராமங்களுக்கு புதிய பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் விளாமரத்தூர், நந்தவனப்புதூர், பூதப்பள்ளம், மேல்குறவன் கண்டி, கீழ்குறவன் கண்டி, எழுத்துக்கல்புதூர், அத்திக்கடவு, மானாறு, சொரண்டி, கூடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து மேட்டுப்பாளையம் வருவதற்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்து வசதிகளை இயக்க வேண்டும் என நீலகிரி எம்பி ஆ.ராசாவிடம் மனு அளித்திருந்தனர். இதனையடுத்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லித்துறை வரை சென்று கொண்டிருந்த பேருந்தை விளாமரத்தூர் வரை நீட்டித்தும், அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை, தாயனூர், வெள்ளியங்காடு கூடப்பட்டி வரை சென்ற அரசு பேருந்தின் இயக்கத்தை மேல்குறவன் கண்டி வரை நீட்டித்து புதிய பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டது.

இந்த பேருந்துகளின் இயக்கத்தை ஜூலை 11 அன்று காலை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து நீலகிரி எம்பி ஆ.ராசா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து விளாமரத்தூருக்கு மாலை 4.30 மணி அளவிலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து மேல்குறவன் கண்டிக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் கோவை பொது மேலாளர் ஸ்ரீதரன், உதகை பொது மேலாளர் கணபதி, மேட்டுப்பாளையம் கிளை மேலாளர்கள் ராதாகிருஷ்ணன், வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அஷ்ரப் அலி, டி.ஆர்.சண்முகசுந்தரம், மேட்டுப்பாளையம் நகர் மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன், துணைத்தலைவர் அருள் வடிவு, கூடலூர் நகர மன்ற தலைவர் அறிவரசு, ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், நகர செயலாளர்கள் முகமது யூனூஸ், முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...