மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. கடந்த 23-ஆம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கிய திருவிழா, லட்சார்ச்சனை, கிராம சாந்தி, கொடியேற்றம் ஆகிய நிகழ்வுகளுடன் தொடர்ந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி ஜூலை 30 அன்று காலை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கோவிலை வலம் வந்து குண்டம் அமைக்கப்பட்ட இடத்தில் எழுந்தருளினார். காலை 5.30 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது.



தலைமை பூசாரி ஹரி நடத்திய சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் குண்டத்தில் பூப்பந்து உருட்டப்பட்டு, முதலில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, போலீசார், உள்ளூர் பிரமுகர்கள் குண்டம் இறங்கினர்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் கைகளில் குழந்தைகளை வைத்துக் கொண்டே குண்டம் இறங்கினர். தேக்கம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் கரகம், பால்குடம், தீச்சட்டி எடுத்து வந்து குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.



பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மேட்டுப்பாளையம் மற்றும் பெ.நா.பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

பக்தர்களின் வசதிக்காக கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 40-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...