பாரத் நெட் திட்டத்திற்கு எதிர்ப்பு: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவையில் 228 ஊராட்சிகளில் 191 ஊராட்சிகளில் பாரத் நெட் திட்டம் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது. திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 191 ஊராட்சிகளில் இணைய வசதி வழங்கிட தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த பாரத் நெட் திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை கேபிள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் சிலர் தங்களுக்கு சொந்தமான நிலங்களின் வழியாக கண்ணாடி இழை கேபிள் கொண்டு செல்ல கூடாது என இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "இந்த திட்டம் முழுமையாக அரசின் திட்டமாகும். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மின் கம்பங்கள் வழியாக கண்ணாடி இழை கேபிள் கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்ய கூடாது" என்றார்.

மேலும், விளைநிலங்கள் உள்ள மின் கம்பங்களின் வழியாக கண்ணாடி இழை கேபிள்கள் கொண்டு செல்லப்படும் போது பயிர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், கண்ணாடி இழையில் எவ்விதமான உலோக பொருட்களும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

"இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். எனவே இந்த திட்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள், கண்ணாடி இழை கேபிள்களை கொண்டு செல்ல தடை விதிக்கும் நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...