கோவை விமான நிலைய விரிவாக்கம்: முதலமைச்சர் வாக்குறுதியை நிறைவேற்றினார், மத்திய அரசு விரைவாக செயல்பட வேண்டும் - கோவை எம்பி கணபதி ராஜ்குமார்

கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து கோவை எம்பி கணபதி ராஜ்குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். நில எடுப்பு பணிகள் நிறைவடைந்ததாகவும், மத்திய அரசு விரைவாக செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.



கோவை: கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

கோவை எம்பி கணபதி ராஜ்குமார் கூறுகையில், "கடந்த 16ஆம் தேதி முதலமைச்சர், அமைச்சர்கள், அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்ட பிறகு கோவை விமான நிலையத்தில் விரிவாக்கம் சம்பந்தமான நில எடுப்பு பணிகள் நிறைவடைந்து விட்டது. மத்திய அரசிற்கு ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிற்காக முன் நுழைவு அனுமதி அளிக்கப்பட்டு அதனுடைய நகல் நேற்றைய தினம் நமது மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வந்துவிட்டது" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "கோவை விமான நிலைய விரிவாக்கத்தை பொறுத்தவரை, 2010ல் நில எடுப்பு பற்றி அப்போதைய திமுக அரசு முதன்முதலில் ஒரு அரசாணையை வெளியிட்டது. பிறகு இத்தனை வருடங்கள் கழித்து இப்பொழுது மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முடிவுற்றிருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே நல்ல முடிவெடுத்து இந்த நல்ல செய்தியை கோவை மக்களுக்கு முதலமைச்சர் பரிசாக அளித்திருக்கிறார். தமிழக முதலமைச்சர் சொன்னபடி வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார், இனி மத்திய அரசு தான் மிக விரைவாக இதை செய்து தர வேண்டும்" என்றார்.

மெட்ரோ திட்டம் குறித்து பேசிய அவர், "மெட்ரோ பணிகளுக்கான அனைத்து தகவல்களையும் திரட்டி மத்திய அரசிடம் கொடுத்து விட்டோம். ஆனால் மத்திய அரசு அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் கொடுத்து விட்டோம் இனி அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்து அவர்களது பங்களிப்பை சொன்னால் நாங்கள் தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் Kranthi Kumar Pati கூறுகையில், "கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தியது 662 ஏக்கர் இதில் 468.83 ஏக்கர் பட்டா நிலமாக உள்ளது. 97% முடிந்துவிட்டது. 451 ஏக்கர் நிலத்திற்கு நாம் தற்போது அனுமதி கொடுக்கிறோம். மீதம் இருக்கின்ற 16 ஏக்கர் நிலத்தில், கோர்ட் கேஸில் ஒரு எட்டு ஏக்கர் நிலம் உள்ளது. மீதி ஓஎஸ்ஆர் நிலம் மூன்று ஏக்கர் அதுபோக இரண்டு ஏக்கர் மேலும் கையகப்படுத்துவதற்காக மூன்று ஏக்கர் என இறுதியாக உள்ளது. இந்த மாதக் கடைசிக்குள் இதனை முடித்து விடுவோம் என டார்கெட் வைத்துள்ளோம். கோர்ட் கேஸில் உள்ளவைகள் மட்டும் கோர்ட் தீர்ப்பின்படி மேற்கொள்ளப்படும்" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "புறம்போக்கு நிலம் 29 ஏக்கர் உள்ளது. அதில் 20 ஏக்கர் நிலத்தை நாம் தற்போது ஒப்படைக்கிறோம். பிரச்சனைக்குரிய இடமாக உள்ள 9 ஏக்கர் நிலத்தில் இறுதி அரசாணை தமிழக அரசிடம் இருந்து வந்த பிறகு அந்த நிலங்களையும் ஒப்படைப்போம். விமான நிலைய விரிவாக்கத்திற்காக தற்போது வரை 1848 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

கோவையில் அமைக்கப்பட இருக்கும் கிரிக்கெட் ஸ்டேடியம் குறித்து, "கிரிக்கெட் ஸ்டேடிய டிசைனுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. டிசைன் செய்தால் தான் எஸ்டிமேட் போட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும்" என்றார்.

மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும், வரும் 30ஆம் தேதிக்குள் கழிவறைகள் பராமரிப்பு, சிசிடிவி கேமராக்களை சரி செய்தல் உள்ளிட்டவை மீதான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி கேட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...