தமிழகம் இந்தியாவின் போதை தலைநகரம் - பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

பொள்ளாச்சியில் சாலை திறப்பு விழாவில் பேசிய அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், தமிழகம் போதையில் தத்தளிக்கும் மாநிலமாகவும் இந்தியாவின் போதையின் தலைநகரமாகவும் விளங்குவதாக குற்றம்சாட்டினார்.



கோவை: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கிபாளையம் பகுதியில் 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அடிக்கல் நாட்டினார்.



இந்நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.



"இந்தியாவின் போதையின் தலைநகராக தமிழகம் விளங்குகிறது. தமிழகம் போதையில் தத்தளித்து கொண்டிருக்கிறது," என்று ஜெயராமன் குற்றம்சாட்டினார். அண்மையில் பொள்ளாச்சி பகுதியில் நடந்த சில சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், மாவடப்பு பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும், ஆனைமலை அருகே செம்மனாபதி பகுதியில் 3000 லிட்டருக்கும் மேலான எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டார்.

பொள்ளாச்சியின் பல பகுதிகளில் கள்ளச்சாராயமும் போதை பொருட்களும் தாராளமாக கிடைப்பதாக கூறிய ஜெயராமன், இதனை தடுக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், இலங்கைக்கு கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்திலிருந்து கடல் வழியாக கடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பிய ஜெயராமன், "காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா அல்லது கடத்தல்காரர்களுக்கு துணை போகிறதா?" என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்தும் கருத்து தெரிவித்த ஜெயராமன், "கொங்கு மண்டலத்தில் அதிமுகவை வளர்த்து வரும் வேலுமணியை பொறுக்க முடியாமல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர் சட்டரீதியாக இதனை எதிர்கொண்டு வெளியே வருவார்," என்றார்.

இந்நிகழ்வில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...