கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமம் எடுப்பதை தடுக்க கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமம் எடுப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். பொதுமக்கள் புகார் தெரிவிக்க அலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமங்கள் எடுப்பதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.

கோவை பேரூர் வட்டத்துக்குள்பட்ட ஆலாந்துறையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அனுமதியின்றி கனிமங்கள் எடுக்கப்படுவதாக கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் ஆய்வுமேற்கொண்டு கனிமத் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்ட பகுதியில் வட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவால் தணிக்கை செய்து, அனுமதியின்றி வெட்டி எடுக்கப்பட்ட கனிமங்களை அளவிட்டு அபராதம் விதிக்க கோவை தெற்கு கோட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அனுமதியின்றி கனிமங்களை எடுத்து செல்வதைத் தடுக்கும் வகையில் வருவாய்த் துறை, வனத்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து இரவு நேரங்களில் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கனிமம் எடுத்துச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் உரிய அனுமதிச் சீட்டினை அனுமதிபெற்ற குத்தகைதாரர்களிடம் பெற்று வாகனத்தில் வைத்திருக்க வேண்டும். குத்தகைதாரரும் கனிமம் ஏற்றிச் செல்லும் வாகனத்துக்கு தவறாது நடைசீட்டினை ஓட்டுநரிடம் கொடுத்து அனுப்ப வேண்டும். உரிய நடைசீட்டு இல்லாத வாகனங்கள் கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுமதியின்றி கனிமங்களை எடுத்துச்செல்வது தொடர்பாக பொதுமக்கள் 95660-38186 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...