போலி தங்க பிஸ்கட் மோசடி: பல்லடத்தில் 14 பேர் கைது

பல்லடம் மகாலட்சுமி நகரில் போலி தங்க பிஸ்கட் விற்பனை முயற்சியில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பிரபல ரவுடி காசிராஜா உள்பட பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். போலீஸார் போலி தங்க பிஸ்கட்டுகள், ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகரில் சட்டவிரோதமாக தங்க பிஸ்கட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீஸார் ஒரு வீட்டில் இருந்த 14 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தேனி மாவட்டம் தொப்பம்பட்டியைச் சேர்ந்த கருமலை (50), உத்தமபாளையத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (40), முருகன் (42), பல்லடம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த மாரியப்பன் (53) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து ஆன்லைனில் போலி தங்க பிஸ்கட்டை வாங்கி அதற்குத் தங்க முலாம் பூசி ஒரிஜினல் தங்க பிஸ்கட் என்று கூறி விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

இந்த நால்வரும் ஆன்லைனில் ஒரு போலி தங்க பிஸ்கட் ரூ.500 வீதம் 5 பிஸ்கட்டுகளை ரூ.2,500க்கு வாங்கியுள்ளனர். பின்னர், நகை புரோக்கர்களான ஈரோட்டைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த அர்ஜுன் ஆகியோரிடம் தங்க பிஸ்கெட் விற்பனைக்கு இருப்பதாகவும், பல்லடம் மகாலட்சுமி நகருக்கு வந்தால் தங்க பிஸ்கட்களை விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

உண்மையான தங்க பிஸ்கட்டுகள் என்று நம்பிய சுரேஷ், அதைப் பறிக்கத் திட்டமிட்டு, தனது நண்பரான நாமக்கல்லைச் சேர்ந்த பிரபல ரவுடி காசிராஜாவிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, காசிராஜா தனது கூட்டாளிகளான விஜயகுமார், கோபிநாத், கிருஷ்ணன், சுரேஷ் ரகு, மணிராஜ், மணி ஆகிய எட்டு பேருடன் பல்லடம் மகாலட்சுமி நகரில் உள்ள மாரியப்பன் வீட்டுக்கு வந்துள்ளனர்.

இதற்கிடையே தங்க பிஸ்கெட் விற்பனை தொடர்பாக ரகசிய தகவல் பெற்ற பல்லடம் போலீஸார், அங்கு சென்று ரௌடி காசிராஜா உள்ளிட்ட 14 பேரையும் கைது செய்துள்ளனர். கருமலை கும்பலிடம் இருந்த 5 போலி தங்க பிஸ்கட்டுகள், காசிராஜா கும்பலிடம் இருந்து இரண்டு கத்தி, ஹாக்கி பேட், அவர்கள் பயன்படுத்திய இரண்டு சொகுசு கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். போலி தங்க பிஸ்கட்டுகளை பறிப்பதற்கான போட்டியில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பல்லடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...