பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் 21வது பட்டமளிப்பு விழா: 918 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன

பொள்ளாச்சியில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் 21வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 918 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. சாலிடன் டெக்னாலஜிஸ் தலைவர் கணேஷ் தேவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



கோவை: பொள்ளாச்சியில் உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியின் 21வது பட்டமளிப்பு விழா நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் டீன் செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார்.

கல்லூரியின் முதல்வர் கோவிந்தசாமி, கல்வி மற்றும் ஆராய்ச்சி சிறப்புகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்தார். என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலாளர் ராமசாமி தலைமை உரை ஆற்றினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சாலிடன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் கணேஷ் தேவராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், "அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு உட்புகுதல் இருந்தாலும் பொறியியல் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கும். அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் மாற்றுத்திறனாளிகளும் தங்கள் எண்ணங்களை எளிதாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்த முடியும். தற்போது நடைமுறையில் உள்ள செயல்பாடுகளை நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்" என்று கூறினார்.



இந்த விழாவில் 918 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், 11 தங்கப்பதக்கங்கள், 11 வெள்ளிப் பதக்கங்கள், 11 வெண்கல பதக்கங்கள் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன், பல்வேறு துறை சார்ந்த தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...