ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றவே கோவை வந்துள்ளேன் - காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். விவசாயிகள் மாநாடு மற்றும் ஆனைமலை நல்லாறு திட்டம் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை இன்று (அக்டோபர் 6) செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: "கொங்கு பகுதியில் விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. ஆனைமலை நல்லாறு திட்டம் பற்றி மிகப் பெரிய வாதம் நடைபெற்று இருக்கிறது. அந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதில் பங்கேற்க காங்கிரஸ் சார்பில் கலந்து கொள்ளவே கோவை வந்துள்ளேன்."

"விவசாயிகளின் நலன் காப்பதற்கு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் பல திட்டங்களை கொண்டு வந்தார். அந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலும் மாபெரும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளாக வேளாண் பெருங்குடி மக்கள் சாலைகளில் போராடும் நிலையை பார்த்து வருகிறோம். கடன் சுமையால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது."

"மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம் அடைவதற்கு காரணமாக இருந்தது பாஜக. பின்னர் அந்த சட்டத்தை மறுபடியும் திரும்பப் பெற்றனர். விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடுகின்ற அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது. கொங்கு மண்டலத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாநாடு நடைபெறுகிறது."

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த செல்வ பெருந்தகை, "திருப்பதி லட்டு எந்த ஒரு அறிக்கையும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பவன் கல்யாண் கருத்து கூறி உள்ளார். லட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரித்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். அங்குள்ள பக்தர்களுக்கு தேவையில்லாத குழப்பத்தை ஆந்திர அரசு ஏற்படுத்துகிறது."

"அங்கு கொடுக்கப்பட்ட நெய் குஜராத் என கூறப்படுகிறது. குஜராத்தில் இருந்து அந்த நெய் எப்படி வந்தது, அந்த கம்பெனி உரிமையாளர் யார், அந்த அறிக்கையை கொடுத்தது யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...