அதிக வட்டி வாக்குறுதி: கோவை தனியார் நிதி நிறுவனம் மீது மோசடி புகார்

கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


கோவை: கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர் ஒருவர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.



சிவகாசி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர், கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த Daily View Trading என்ற நிறுவனத்தை சேர்ந்த விவேக்சேது மற்றும் விஷ்வலிங்கம் ஆகியோருடன் ஆன்லைன் மூலமாக பழக்கமானார். இவர்கள் தங்களது டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி வரும் என கூறியதை நம்பி சரவணன் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார்.

ஆரம்பத்தில் முதலீட்டிற்கான வட்டி சரியாக வந்ததைத் தொடர்ந்து சரவணன் மேலும் லட்சக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு திடீரென வட்டி வருவது நிறுத்தப்பட்டது. இது குறித்து ஆராய்ந்த போது, விவேக்சேது மற்றும் விஷ்வலிங்கம் ஆகியோர் நிறுவனத்தை காலி செய்து விட்டது தெரியவந்தது.



இது தொடர்பாக சரவணன் 2022ஆம் ஆண்டு கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி தற்போது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சரவணன் கூறுகையில், "நான் அவர்களது டிரேடிங் நிறுவனத்தில் மொத்தம் 22 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்திருந்தேன். நான்கு-ஐந்து மாதங்களுக்குப் பிறகு என் பணத்தை தராமல் ஏமாற்றி வந்தனர். இது குறித்து விருதுநகர் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், கோவையில் புகார் அளிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதற்கிடையில் அவர்கள் நிறுவனத்தை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர்," என்றார்.

மேலும் அவர், "கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் இரத்தினபுரி காவல் நிலையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2022ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனக்கு உடல்நலப் பாதிப்பு இருப்பதால் விரைந்து நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டுத் தர வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...