பவன் கல்யாண் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: கோவை காவல் ஆணையரிடம் வெண்மணி மனு

திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். மதக்கலவரம், சாதி பாகுபாடு தூண்டும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டியுள்ளார்.



Coimbatore: திராவிட தமிழர் கட்சி தலைவரும் வழக்கறிஞருமான வெண்மணி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், திருப்பதியில் தமிழர்கள் மத்தியில் பேசும்போது தமிழகத்தில் இந்து மதத்தை பற்றி இழிவாக பேசுகிறார்கள், அவர்களுக்கு எதிராக ஏன் கொந்தளிக்க கூடாது என பேசியது அதிர்ச்சி அளிப்பதாகவும், இது மதக்கலவரத்தை தூண்டுவது போல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாட்டு கொழுப்பு குறித்தும் பேசியது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை இழிவு படுத்துவது போல் உள்ளதாகவும், எனவே அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெண்மணி, "பவன்கல்யாண் இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கி பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும், பல்வேறு மதமக்களிடையே மதக்கலவரத்தையும் தூண்டும் விதமாகவும் பேசி வருகிறார். இது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்" என்றார்.

திருப்பதியில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் மாட்டிறைச்சி கொழுப்பு தடவியதால் தீட்டு பட்டுவிட்டதென தொடர் பிரச்சாரம் செய்வது, காலகாலமாக மாட்டிறைச்சியை உணவாக உட்கொள்பவர்களையும், தலித்துகளையும் சாதி ரீதியாக இழிவுபடுத்தும் செயலாகும் என்றும் வெண்மணி குறிப்பிட்டார்.

"தமிழக துணை முதல்வர் உதயநிதி அவர்கள் சொன்ன அரசியல் சட்டவிரோத சாதிய வருணாசிரம சனாதனக் கட்டமைப்பு ஒழிப்பு குறித்து தான் பேசியிருந்தார். ஆனால் நடிகர் பவன்கல்யாண் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றபோதும், துணை முதலமைச்சராக பதிவேற்றபோதும் எடுத்துக் கொண்ட இரகசிய காப்பு பிரமாணத்தை மீறி சமய சார்புடன் நடந்து கொள்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும்" என்று வெண்மணி தெரிவித்தார்.

இந்திய குற்றவியல் சட்டங்களின்படி கிரிமினல் குற்றம் குறித்து தகவல் தெரிந்த எந்த ஒரு நபரும் காவல் துறையில் புகார் அளிக்கலாம் என்ற அடிப்படையில் பவன் கல்யாண் மீது புகார் அளிப்பதாகவும், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டியது காவல்துறையின் கடமை என்றும் வெண்மணி வலியுறுத்தினார். காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போவதாகவும் அவர் எச்சரித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...