கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மக்கள் வாக்குப்பெட்டியில் பதிலளிப்பார்கள் என தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிவசக்தி காலனி பகுதியில் இருசக்கர வாகன பேரணியுடன் வாக்கு சேகரிப்பு தொடங்கியது. இந்த பேரணியை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து, இருசக்கர வாகனத்தை இயக்கினார். வானதி சீனிவாசன் அவருடன் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் நூற்றுக்கணக்கான பாஜக - அதிமுக கூட்டணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “நிறைவு நாள் பிரச்சாரம் இருசக்கர வாகன பேரணியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போலவே கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்,” என்றார்.



மேலும், “கடந்த இரண்டு நாட்களாக கரூர் ரவுடி கும்பல் மூலம் காவல்துறையை மிரட்டுவது, காவல் நிலையத்திலேயே ரகளை செய்வது, எதிர்க்கட்சியினரை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையை கொள்ளையடிப்பதற்காக ஸ்டாலினால் அனுப்பப்பட்ட செந்தில் பாலாஜியின் ஆட்களே இதனை அரங்கேற்றி வருகின்றனர். கோவை மக்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள்,” என்றார்.



அவர் தொடர்ந்து, “திமுகவினர் சில தொகுதிகளில் ₹2,500-மும், செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் ₹5,000-மும் வாக்காளர்களுக்கு வழங்குகின்றனர். அந்த பணம் எங்கிருந்து வந்தது? டாஸ்மாக்கில் கொள்ளையடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணமா? மணல் மாஃபியா மூலம் சம்பாதிக்கப்பட்ட பணமா?” என கேள்வி எழுப்பினார்.

“கோவையை கெடுப்பதற்காகவும், பழிவாங்குவதற்காகவும் முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை அனுப்பியுள்ளார். கோவை மக்கள் ஸ்டாலினுக்கும் திமுகவிற்கும் பாடம் புகட்டுவார்கள்,” என்றும் தெரிவித்தார்.

“போதைப்பொருள் மூலம் ஆதாயம் அடைந்து, அந்த பணத்தால் எதிர்கால சந்ததியை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மக்கள் தெளிவாக வாக்களிக்க வேண்டும்,” என்றும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “கோவையில் ராமநாதபுரம் காவல் நிலையத்தை பூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசின் நிதியை கொண்டு வந்து திட்டங்களை செயல்படுத்த வானதி சீனிவாசனின் பணிச்சுமை அதிகரிக்கப் போகிறது,” என்றார்.

“தேர்தல் கணிப்புகள் அனைத்தும் நமக்கு சாதகமாக வரத் தொடங்கிவிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி அலைவை இன்னும் சரியாக கணிக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. மத்திய அரசின் நிதியை பயன்படுத்தக்கூடிய அரசு வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்,” என்றார்.

மேலும், “திமுக அராஜக அரசியலையும் வன்முறை அரசியலையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. மக்கள் எப்போதும் வாக்குப்பெட்டியில்தான் பேசுவார்கள். அந்த பதிலை ஏப்ரல் 23ஆம் தேதி சொல்லப் போகிறார்கள்,” என தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “செந்தில் பாலாஜி எப்போதாவது தனது தவறை ஏற்றுக்கொண்டாரா? நாளை மறுநாள் வரை காந்தியவாதி போல பேசுவார். ஆனால், ஏப்ரல் 23ஆம் தேதி மக்கள் அவரது முகத்திரையை கிழிப்பார்கள்,” என கடுமையாக விமர்சித்தார்.

மேலும், “தேர்தல் ஆணையம் இன்னும் வலுவாக செயல்பட வேண்டும். கூடுதல் பணியாளர்களை கொண்டு வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வாக்காளர்கள் எதிர்பார்க்கிறார்கள். மாவட்ட நிர்வாகமும் தேவையற்றவர்களை மாவட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்,” என்றார்.

இறுதியாக, “வேட்புமனு தாக்கல் செய்த நாளிலேயே வானதி சீனிவாசனின் வெற்றி உறுதியாகிவிட்டது. கோவை வடக்கு தொகுதியில் ₹5,000 கொடுத்தாலும் அதில் ஆச்சரியமில்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த தேர்தலை பாதிக்க முடியாது,” என அண்ணாமலை தெரிவித்தார்.

Newsletter

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...