ஆராய்ச்சியாளர்கள் - தொழில்முனைவோர்கள் சந்திப்பு: உணவு தொழில் வளர்ச்சிக்கு TNAU-வில் ‘Connect & Grow’ நிகழ்ச்சி.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘Connect & Grow – Food Business Meet’ நிகழ்ச்சியில், உணவு பதப்படுத்தல் துறையில் செயல்படும் MSME நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (TNAU) செயல்பட்டு வரும் உயிரித் தொழில்நுட்ப மகத்துவ மையம் சார்பில், “Connect & Grow – Food Business Meet” நிகழ்ச்சி ஜூன் 5 ஆம் தேதி நடைபெற்றது. உணவு பதப்படுத்தல் துறையில் செயல்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs), ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்க விழாவில், தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தகவலியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் எல். அருள் வரவேற்புரை வழங்கினார். உணவு பதப்படுத்தல் துறையின் வேகமான வளர்ச்சியை சுட்டிக்காட்டிய அவர், புதுமை, மதிப்புக் கூட்டுதல் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

தொடர்ந்து, தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பவியல் மையத்தின் தலைவர் மற்றும் TNAPEX-ன் தொழில்நுட்ப பங்குதாரரான காக்ஸ்பிட் அமைப்பின் இயக்குநர் முனைவர் ந. செந்தில் உரையாற்றினார். புதிய தயாரிப்பு மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் மூலம் MSME நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆதரவுகள் குறித்து விளக்கிய அவர், தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சந்தைத் தேவைகளை பூர்த்தி செய்யும் தரமான உணவுப் பொருட்கள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்தார்.

மேலும், காக்ஸ்பிட் அமைப்பு தயாரிப்பு உருவாக்கம், பரிசோதனை, தரச் சரிபார்ப்பு, ஒழுங்குமுறை வழிகாட்டுதல் மற்றும் வணிகமயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவுகளை வழங்கி வருவதாகவும், இது உணவு பதப்படுத்தல் துறையின் போட்டித்திறனை உயர்த்தி நிலையான வளர்ச்சிக்கு வழிவகுப்பதாகவும் அவர் கூறினார்.

இயற்கை வள மேலாண்மை இயக்குநரும் தொழில்முனைவோருமான முனைவர் சு. கார்த்திகேயன், அறிவியல் அடிப்படையிலான தயாரிப்பு மேம்பாட்டிற்காக ஆராய்ச்சி நிறுவனங்களும் தொழில்துறையும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தயாரிப்புகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய தயாரிப்பு பரிசோதனை, தர உத்தரவாதம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தரநிலைகளை கடைப்பிடிப்பது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்கள் மற்றும் APEDA விதிமுறைகள் தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை உயர்த்துவதோடு, சந்தை அணுகலை எளிதாக்கி ஏற்றுமதியை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன என்றும் அறிவியல் சரிபார்ப்புகள் மூலம் பண்ணையிலிருந்து நுகர்வோரின் கைகளுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவுப் பொருட்களை கொண்டு செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

திருச்சி TNAPEX மண்டல மையம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் திட்ட மேலாளரும் குழுத் தலைவருமான அ. கீர்த்திவாசன், TNAPEX திட்டத்தின் மூலம் தொடக்க நிறுவனங்கள் மற்றும் MSME-களுக்கு வழங்கப்படும்-

புதிய தயாரிப்பு உருவாக்கம், உற்பத்தி வசதி அடையாளம் காணுதல், தயாரிப்பு பதிவு, உரிமம் பெறுதல், ஒழுங்குமுறை இணக்கம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடைமுறைகள், சந்தை இணைப்புகள், பிராண்டிங் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முழுமையான ஆதரவுகள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த வாய்ப்புகளை தொழில்முனைவோர் முழுமையாகப் பயன்படுத்தி புதுமைகளை விரைவுபடுத்தி, தங்களது வணிகங்களை விரிவுபடுத்தி உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் தடம் பதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் தாவர உயிரித் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வி. ராஜன்பாபு நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...