ஊட்டியில் மீண்டும் மலருமா சினிமாத் தொழில்.? : ஏக்கத்தில் சினிமாத் தொழிலாளர்கள்

சினிமாவில் வரும் இயற்கைக் காட்சிகள் என்றவுடனே அனைவரின் நினைவுக்கும் வருவது ஊட்டி. "ஒரு காலத்துல எப்போ பார்த்தாலும் சினிமா ஷூட்டிங் நடந்து வந்த ஊர்ல, இப்போ ஷூட்டிங் நடக்குறத பார்க்கிறதே அதிசயமாக இருக்கு" என்ற பேச்சு தான் இப்போது ஊட்டியில் அதிகம் கேட்கிறது.

ஊட்டி: சினிமாவில் வரும் இயற்கைக் காட்சிகள் என்றவுடனே அனைவரின் நினைவுக்கும் வருவது ஊட்டி. "ஒரு காலத்துல எப்போ பார்த்தாலும் சினிமா ஷூட்டிங் நடந்து வந்த ஊர்ல, இப்போ ஷூட்டிங் நடக்குறத பார்க்கிறதே அதிசயமாக இருக்கு" என்ற பேச்சு தான் இப்போது ஊட்டியில் அதிகம் கேட்கிறது.

சினிமா 

ஏழைகளின் காஷ்மீர் என்றழைக்கப்படும் ஊர், சினிமாக்காரர்களுக்கு நிஜ காஷ்மீராகவே உருமாறியது. சினிமாக்காரர்களின் ஊட்டி மீதான காதல் காரணமாகவே 'ஊட்டி வரை உறவு' என்ற திரைப்படம் உருவானது. கருப்பு வெள்ளை காலம் முதல் தற்போதைய டிஜிட்டல் யுகம் வரை ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தப்படாத இடங்களே இல்லை.

மகேந்திரன், பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் ஆகிய முன்னணி இயக்குநர்களின் கதை களமாக உதகை இருந்து வந்தது.



காஷ்மீரில் தீவிரவாதம் தலைதூக்கிய போது, அங்கிருந்து சினிமாக்காரர்கள் ஊட்டிக்கு ‘டிரான்ஸ்பர்’ ஆனார்கள். சினிமாக்களில் பாடல் காட்சிகளுக்கு அழகு சேர்த்தது ஊட்டியின் இயற்கை எழில். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காளி மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் பல நூறு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஊட்டியில் நடைபெற்றது. 

சினிமா படப்பிடிப்பு என்றாலே ஊட்டி மக்களுக்குக் கொண்டாட்டம் தான். படத்தில் நடிக்கும் நடிகர்கள், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேவையான வாகனங்கள் மற்றும் படிப்பிடிப்பில் பங்கேற்பவர்களுக்கு உணவு தயாரிக்க தேவையான காய்கறி, அரிசி, மளிகை பொருட்கள், இறைச்சி ஆகிய பொருட்கள் உள்ளூரில் வாங்கப்பட்டன.

மேலும் படப்பிடிப்புக்கு ஜூனியர் ஆர்டிஸ்ட்களின் தேவையை உள்ளூர் மக்கள் பூர்த்தி செய்து வந்தனர். இதனால், உள்ளூர்வாசிகளின் பொருளாதாரத்துக்குச் சினிமா படப்பிடிப்பு உத்தரவாதம் அளித்து வந்தது. 

நலிவடைகிறது..!

ஊட்டியில் பெரும்பாலான பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் படப்பிடிப்பு நடத்த கெடுபிடி அதிகரித்துள்ளது. இதனால் சினிமா தொழிலுக்குச் சிக்கல் தொடங்கியது. சிறிது சிறிதாக சினிமாத் தொழில் குறைய அதனை நம்பியிருந்த பல நூறு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். 



'ஊட்டியில் பூங்காக்கள், சாலைகள், அரசு கட்டிடங்களில் படப்பிடிப்பு நடந்தால் அரசு வருவாய் கிடைக்கும். இதனால் சுற்றுலாவும் வளர்ந்தது. ஆனால் இப்போது ஊட்டியில் படிப்பிடிப்பு நடத்துவது பெரிய சவாலாக இருக்கிறது. கடந்த 2001- 2006 அ.தி.மு.க., ஆட்சியில் நகராட்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த நாள் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரமும், பூங்காக்களில் படப்பிடிப்பு நடத்த ரூ.50 ஆயிரம் என கட்டணம் உயர்த்தப்பட்டது. அத்துடன் சூட்டிங்-க்கு அனுமதி வழங்குவதிலும் கெடுபிடிகள் அதிகமானது. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சென்னை தலைமை வனப்பாதுகாவலரிடம் அனுமதி பெற்று, தலைமைச் செயலகத்தில் அதற்கான கட்டணம் கட்டியதும் அனுமதி கிடைத்து விடும். அந்த அனுமதியை மாவட்டத்தில் உள்ள வன அதிகாரிகளிடம் காட்டினால் போதுமானது. ஆனால், தற்போது தலைமை வனப்பாதுகாவலரிடம் அனுமதி பெற்றாலும், உள்ளூர் மாவட்ட வன அலுவலரிடம் படப்பிடிப்பு நடத்த ஒப்புதல் பெற வேண்டும். ஒப்புதல் பெற்றதும் மீண்டும் சென்னைக்கு சென்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

முன்பு 3 நாட்களில் அனுமதி கிடைத்த நிலையில், தற்போது அனுமதி பெற 12 முதல் 15 நாட்களாகின்றன. இதனால், படப்பிடிப்பு நடத்தக் காலதாமதமாகிறது. திட்டமிட்ட படி படப்பிடிப்பு நடத்த முடியாததால், படத்தின் பட்ஜெட் கணிசமாக உயர்ந்து விடுகிறது. மேலும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கால்ஷீட்டில் பிரச்சினை ஏற்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்த தகவல் அனைத்து மொழி திரைத்துறையினருக்கும் தெரிய வந்துள்ளதால், அவர்கள் ஊட்டியில் படப்பிடிப்பு நடத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. சினிமா படப்பிடிப்புகள் குறைந்தால், மாவட்டத்தில் இந்த தொழிலை சார்ந்திருந்த பல நூறு பேர் வேலைவாய்ப்பு இழந்து வருகின்றனர். 

இதே நிலை தொடர்ந்தால் சினிமா என்றால் ஊட்டி என்றிருந்த நிலை மாறி, ஊட்டியில் சினிமா படப்பிடிப்பு நடப்பதே அதிசயமாகி விடும். இதை தடுக்க அரசு, விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும். சினிமா படப்பிடிப்பு நடத்த ‘சிங்கிள் விண்டோ’ முறையில் அனுமதி அளிக்க வேண்டும். அரசு சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்கான இடையூறுகளைக் களைந்தால், சினிமாவின் ஊட்டி வரையிலான உறவு மீண்டும் வளரும். 

Newsletter

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...