திருநங்கைகளும் ஒரு மனித இனம்தான்..! மறுவாழ்வு பெற்ற தஷ்லிமா நஷ்ரிம் சில பகிர்வுகள்


கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தஷ்லிமா நஷ்ரிம். முஸ்லிம் குடும்பத்தில் ஆண் குழந்தையாக பிறந்த இவருக்கு தனது 15 வயதில் தான் தனக்குள் ஒரு பெண்ணின் தன்மை இருப்பதை உணர்ந்துள்ளார். வாழ்வின் தவறான வழிப்பாதையில் சில காலம் எண்ணற்ற சிரமங்களை சந்தித்து மறுபிறவி எடுத்தது போல் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேட்பாரின்றி  உள்ள நோயாளிகளுக்கு உதவி செய்து வருகிறார். 

இதுகுறித்து நமது நிருபரிடம் தஷ்லிமா நஷ்ரிம் பகிர்ந்துகொண்டதாவது:-



கோவையில், முஸ்லிம் குடும்பத்தில் ஆண் குழந்தையாக பிறந்த எனக்கு 15 வயது வரை ஒரு பெண்ணின் தன்மை இருப்பது தெரியாது. அதற்குப் பின்பே அதை நான் உணர்ந்தேன். இதுகுறித்து பிறரிடம் கூறவும் பயமாக இருந்தது. வேறுவழியின்றி எனது தாயிடமே கூறிவிடலாம் என்ற முடிவெடுக்கையில் என் தாய் திடீரென உயிரிழந்துவிட்டார்.

பின், குடும்பத்தினரிடம் இதைப் பற்றி தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருக்கு போனேன். அங்கு என்னைப் போன்றே உள்ள திருநங்கைகளிடம் இணைந்து பொது இடத்தில் பிச்சை எடுப்பது, கடைகளுக்கு சென்று காசு கேட்பது, விபச்சாரத்தில் ஈடுபடுவது என தொடர்ந்தேன். ஒருகட்டத்தில் கஞ்சா, மது என போதையிலும் அடிமையானேன். 

இது தொடர்ந்து நடைபெற்றிருக்க திடீரென உடல் நிலை மோசமடைந்தது. பின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றபோதுதான் எனக்கு மஞ்சற்காமாலை நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்துதான் சிகிச்சைக்காக கோவை வந்தேன்.

கோவை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நான் மருத்துவமனையின் வரான்டா பகுதியிலேயே அனுமதிக்கப்பட்டேன். காரணம், பொதுமருத்துவமனையில் ஆண்களுக்கு என தனி பிரிவும், பெண்களுக்கு என தனி பிரிவும் உள்ளது. ஆனால், திருநங்கைகளுக்கு என எதுவும் இல்லை என மருத்துவமனை ஊழியர்கள் என்னை அறையின் வெளியில் படுக்க வைத்து சிகிச்சை அளித்தனர்.

சரியான உணவு கூட எனக்கு வழங்கப்படவில்லை. மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள ஒரு தண்ணீர் குழாயில் தான் தண்ணீர் பிடித்து குடிப்பேன். இனி நான் பிழைப்பது கடினம் என்றாகிவிட்ட நிலையில் 15 நாட்கள் கழித்து ஒருவழியாக உயிர் பிழைத்தேன்.

மருத்துவமனையில் என்னை உபசரித்த முறைகள், உணவுக்கு தட்டுப்பாடு, ஊழியர்களின் அணுகுமுறை என எனக்குள் ஒருவித கடுமையான வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. மேலும், அம்மருத்துவமனையில் ஒரு பிரிவில் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் முறையான உணவுகள் வழங்காமல், சரியான பராமரிப்பு இல்லாமலும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்கையில் இந்த நோயாளிகளுக்கு உறவுகள் யாரும் இல்லை. அதனால் தான் இவ்வாறு நடத்தப்படுகின்றனர் என கூறினார். இவை அனைத்தும் எனக்குள் பெருத்த வேதனையை ஏற்படுத்தியது.

சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய நான் மீண்டும் மது உள்ளிட்ட போதைக்கு அடிமையானேன். ஒரு முறை காசு கேட்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்று கூத்தாண்டவர் கோவில் திருவிழாவிற்காக மருத்துவரிடம் காசு கேட்டேன். அவர் தர மறுத்துவிட்டார். எனக்கு கோபம் வந்து கடுமையான வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கண்ணாடி கதவுகளை உடைத்தேன். பின் உள்ளே சென்ற மருத்துவர் எனக்கு அஞ்சலி ஜெயின் என்பவரது முகவரி தந்து அவரை சென்று பார்க்குமாறு கூறினார். 

நானும் சென்று அஞ்சலி ஜெயினை பார்த்தேன். அவர் எனக்கு பல அறிவுரைகளை வழங்கினார். போதைப் பழக்கத்தில் இருந்து என்னை மீட்டெடுத்தார். தொடர்ந்து உலவியல் ரீதியிலான சிகிச்சைகளை வழங்கினார். அவர் மூலம் சோபனா குமார் என்பவர் அறிமுகமானார்.



அவர்களது உதவியுடன் சமையல் செய்து கோவை அரசு பொது மருத்துவமனையில் உள்ள உறவின்றி இருக்கும் நோயாளிகளுக்கு உணவு பரிமாறிவந்தேன். பின் அஞ்சலி ஜெயின் மற்றும் சோபனா குமாரின் உதவியுடன் கோவை அரசு பொது மருத்துவமனையின் தலைவரை (டீன்) சந்தித்து அனாதைகள் பிரிவில் உள்ள நோயாளிகளை பராமரிக்க அனுமதி பெற்றேன். 

பின், சேஞ்ச் என்ற ட்ரஸ்ட்டினை ஆரம்பித்து அதன் மூலம் அந்த நோயாளிகளுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கி தற்போது சேவை செய்து வருகிறேன்.



பொதுமக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புவது:-

திருநங்கைகளும் ஒரு மனிதர்களே. உங்களது குடும்பத்தில் இவ்வாறு ஒருவர் இருந்தால் அவரை வெறுத்து வெளியேற்றாதீர்கள். அவர்களுக்கான தகுந்த சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள். திருநங்கையாக பிறப்பதும் இயற்கையே. அவர்களை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மட்டுமே இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தினால் அது அவர்களுக்கு வெறுப்புணர்வை உண்டாக்கும். பின் வீட்டை விட்டு வெளியேறி தகாத செயல்களில் ஈடுபடுவர். திருநங்கைகளையும் சாதாரண மனிதர்களைப் போலவே மதியுங்கள். 



இந்த நேரத்தில் எனக்கென ஒரு சிறப்பான வாழ்க்கையை உருவாக்கித் தந்த அஞ்சலி ஜெயின் மற்றும் சோபனா குமார், அரசு மருத்துவமனை டீன் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...