கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 66 வது வார்டில் கழிவு நீரேற்று நிலையத்தை திறந்து வைத்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

66 வது வார்டில் உள்ள கருப்பராயன் கோவில் வீதியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16.90 லட்சம் மதிப்பில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்ட நிலையில், அதனை கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.



கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 66 வது வார்டில் உள்ள ராமநாதபுரம் கருப்பராயன் கோவில் வீதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16.90 லட்சம் மதிப்பிலான கழிவு நீரேற்று நிலையத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் பேசியதாவது, இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவுநீரை அகற்றுவதில் மிகப்பெரிய சிரமங்கள் இருந்தது. இதனால் மக்களுக்கு சுகாதார சீர்கேடு உடல்நலம் பாதிப்பு ஆகியவை அதிகமாக இருந்து வருகிறது.

இதனை சரி செய்து தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தேன். அதன்படி இன்று கழிவு நீரை அகற்றுவதற்கான பம்பிங் ஸ்டேஷன் (கழிவு நீரேற்று நிலையம்) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. பட்டா வசதியும் ஏற்படுத்தி தர வேண்டி உள்ளது. பட்டா வசதி ஏற்படுத்தி தருகின்ற இடத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி வருகிறேன்.

பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், இந்த ஆண்டு கரும்புக்கு பதிலாக பணமாக கொடுத்து விடுவோம் என்று அமைச்சர் ஏ.வ.வேலு கூறுகிறார்.

கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது. செய்கின்ற விஷயத்தை ஊழல் இல்லாமல் நேர்மையாக செய்யுங்கள் என்று தான் நாங்கள் கூறுகிறோம். ஆனால் செய்யவே போவதில்லை என கூறுவது சரியல்ல.

அப்படி பார்த்தால் சாலைகள் குறித்து பல்வேறு புகார்களை முன் வைத்தால் வெறும் குழிகளை மட்டும் அடைத்து விட்டு போய் விடுகிறார்கள். அது ஒரு மழை பெய்தால் போய்விடுகிறது. இதை சுட்டி காட்டினால் அதை மாற்றுவதில்லை.

மேலும் தமிழகத்தில் மருந்து விநியோகம் செய்வதில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. மக்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பதில்லை.

மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை விநியோகம் செய்யும் நிறுவனத்தார்களை முதல்வரின் இல்லத்தில் இருக்கும் ஒருவர் அழைத்து தங்களுக்கு கமிஷன் கொடுத்தால்தான் மருந்துகளை விநியோகம் செய்ய முடியும் என பேசுவதாக விமர்சித்தார்.

மருத்துவர்களுக்கு தாங்கள் கூறும் மருந்துகளை தான் எழுதி தர வேண்டும் என மறைமுகமாக மிரட்டல் விடும் அரசாக இந்த அரசு உள்ளது. இதுபோன்ற தவறுகளை சுட்டி காட்டினால் அதனை சரி செய்ய வேண்டிய அரசு இந்தத் திட்டத்தையே இல்லாமல் ஆக்குகிறது.

ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடைபெறுகிறது. அப்படி என்றால் ஒவ்வொரு துறையிலும் வழங்க வேண்டிய உதவிகளுக்கு பதில் பணமாக கொடுத்து விடுவீர்களா என கேள்வி எழுப்பினார். தமிழக முதல்வர் ஒவ்வொரு துறையிலும் இருக்கின்ற குடும்ப ஆதிக்க சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக வீடுகளில் தான் பாகம் பிரிப்பார்கள். ஆனால், இங்கு மாநிலத்தின் முதல்வரின் குடும்பத்தில் மகனுக்கும் மருமகனுக்கும் துறைகளை பிரித்து வருகின்றனர்.

தற்போது மீண்டும் பரவ துவங்கியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து மாநில சுகாதார துறையிடம் கோரிக்கை கொடுக்கிறோம். இது குறித்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசாங்கமும் பல்வேறு இடங்களில் முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



இந்நிகழ்விற்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனிடம் அப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...