கோவையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை - 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க தனிப்படை!

கோவை ஆவாரம்பாளையம் சாலையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் சத்தியபாண்டி என்பவரை இரு சக்கர வாகனங்களில் வந்து கொலை செய்துவிட்டு தப்பிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி என்கிற சத்திய பாண்டி வயது (வயது 32). ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்றிரவு நவ இந்தியாவில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு இளநீர் கடை அருகே தனது நண்பர்களுடன் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சத்தியபாண்டியை வெட்டியது. இதனால், அச்சம் அடைந்த சத்தியபாண்டி உயிர் பிழைக்க அங்கிருந்து ஓடத்தொடங்கினார். இருப்பினும், அந்த கும்பல் விடாமல் அவரை துரத்தி சென்றது. அப்போது, உயிர் பிழைக்க சாலையோரம் இருந்த வீட்டிற்குள் நுழைந்த சத்தியபாண்டியனை, அந்த கும்பல் விடாமல் விரட்டி சென்று வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வெட்டியது.



இதில், படுகாயமடைந்த சத்திய பாண்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார், சத்தியபாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2020-ம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் பிஜூ என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் சத்தியபாண்டிக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக, சத்தியபாண்டி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்து உள்ளார்.

எனவே, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைத்து, தீவிர தேடுதல் நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...