ஊட்டச்சத்து மாத்திரை சாப்பிட்ட 4 மாணவிகள் மயக்கம் - கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள உருது நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவிகள், அதிகளவில் சத்துமாத்திரைகள் சாப்பிட்டதால் வகுப்பறையில் மயங்கி விழுந்தனர். இவர்களை ஆசிரியர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உதகை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழக அரசு சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படும். இது ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ஆசிரியர் மூலம் வழங்கப்படும்.

இந்நிலையில் 8-ம் வகுப்பு பயின்று வரும் 4 மாணவிகளிடையே யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என போட்டி நிலவியதாக தெரிகிறது. இதனால், ஒவ்வொரு மாணவியும் மாத்திரைகளை அதிகளவிற்கு உட்கொண்டுள்ளனர். இதனால், அந்த மாணவிகள் மயக்கமடைந்து வகுப்பறையில் விழுந்துள்ளனர்.

இதைப்பார்த்த மற்ற மாணவிகள், ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக மயக்கமடைந்த மாணவிகளை மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 மாணவிகள் 30 ற்கும் மேற்பட்ட மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் நால்வரின் உடல்நிலையும் சீராகி வருவதாக உதகை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



இருப்பினும் மாத்திரை சாப்பிட்டு 12 முதல் 14 மணி நேரத்திற்கு பின்னர்தான் அதன் வீரியம் தெரியவரும் என உதகை மருத்துவர்கள் கூறிய நிலையில், தற்போது அந்த 4 மாணவிகளும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உதகை சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி பேசுகையில், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத்திரை வாரம் ஒரு முறை மதியம் சாப்பிட்ட பின் அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த நிலையில் இவ்வளவு மாத்திரை மொத்தமாக மாணவிகளுக்கு எவ்வாறு கிடைத்தது என்று தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

இந்த சம்பவம் குறித்து உதகை மேற்கு காவல் ஆய்வாளர் மீனா பிரியா தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...