திமுக நிர்வாகிகளின் சொத்து ரூ.1,34,317 கோடி - பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை!

திமுகவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்களின் சொத்து மற்றும் ஊழல் விவரப்பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதன்படி, ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் சொத்துக்கள் உட்பட மொத்தம் திமுக நிர்வாகிகளிடம் 1,34,317 கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆளும் தி.மு.க நிர்வாகிகள் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில் திமுக.,வின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் யார் எவ்வளவு சொத்து வைத்துள்ளனர் என்ற விவர பட்டியலையும், ஊழல் விவரத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.200 கோடி ரூபாயை இரு ஷெல் நிறுவனத்திடம் இருந்து லஞ்சமாக பெற்றுள்ளார் என்ற தகவலையும் அப்போது அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கண்ணதாசன் எழுதிய வனவாசம் என்ற புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டிய அவர், அன்று துவங்கிய திமுகவின் ஊழல், திருட்டு, இன்று வரை சென்று கொண்டிருக்கிறது என்றார்.

நான் சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறது என்று கூறிய அண்ணாமலை, 21ம் தேதி மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, ஜெகத்ரட்சகன் - ரூ.50 ஆயிரத்து 219 கோடி, எ.வ.வேலு - ரூ.5,442.39 கோடி, கே.என்.நேரு - ரூ.2,495.14 கோடி, கனிமொழி- ரூ.830.33 கோடிகலாநிதிமாறன் - ரூ.12,450 கோடி, டிஆர் பாலு - ரூ.10,841.10 கோடி, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் - ரூ.579.58 கோடி, கலாநிதி வீராசாமி - ரூ.2,923.29 கோடி,

பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி - ரூ.581.20 கோடி, திமுக கட்சியின் சொத்து மதிப்பு - ரூ.1,408.94 கோடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.1,023.22 கோடி, உதயநிதி - ரூ.2,039 கோடி, சபரீசன் - ரூ.902.46 கோடி, ஜி ஸ்கொயர் வருமானம் - ரூ.38,827.70 கோடி என மொத்தம் ரூ.1,343,170,000,000 (ரூ.1,34,317 கோடி) என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினுக்கு ரூ.200 கோடிக்கு ஆல்ஸ்டாம் கம்பெனி மூலமாக லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்தோ யூரோப்பியன் வென்சர் பிரைவேட் லிமிடெட் என்ற சிங்கப்பூரை சேர்ந்த ஷெல் கம்பெனியும், ஹாங்காங்கை சேர்ந்த குளோபல் கிங் டெக்னாலஜி என்ற ஷெல் கம்பெனியும்தான் 2011ல் தேர்தல் நிதியாக இந்த பணத்தை ஸ்டாலினிடம் லஞ்சமாக கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இதனை சிபிஐ இயக்குனரிடம் நானே நேரடியாக புகார் அளிக்க உள்ளேன். இதில், மத்திய அரசின் 15 சதவீத பங்கு இருப்பதால் இதனை சிபிஐ விசாரிக்க முழு உரிமை உள்ளது. இது நம் ஜனநாயகத்திற்கான போராட்டம். ஊழல், லஞ்சம் குறித்து இப்போது கேள்வி கேட்காவிட்டால், தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய கேடு காத்துக்கொண்டு இருக்கிறது என்றார்.

ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல் 2024ம் ஆண்டுக்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்த அண்ணாமலை, அடுத்த பாகம் நீங்கள் நினைத்து பார்க்காத வகையில் இருக்கும் என்றும் கூறினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட், ஜல்லிக்கட்டு என அனைத்திலும் கையெழுத்து போட்டது திமுக, இப்படி தன்னிடம் நிறைய பட்டியல் இருப்பதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, முதல் பட்டியல் முதல்வர் பற்றி நேரடியாக இருக்க வேண்டும் என வெளியிட்டுள்ளேன்.

அடுத்தடுத்து அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பட்டியல் வெளியிடுவேன். இன்னும் 3 பட்டியலை வெளியிட உள்ளேன். இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் 6 புகார் அளித்துள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சிபிஐ.,யிடம் செல்கிறோம் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...