அறிவிப்புகளை திரும்ப பெறும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது - கோவையில் தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் பார்க்க உள்ளதாகவும், திமுக ஆட்சி அறிவிப்புகளை திரும்ப பெறும் ஆட்சியாக உள்ளதாகவும் விமர்சித்தார்.


கோவை: சர்ச்சைக்குரிய கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்க்க இருப்பதாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 2 முதல்வர்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும். முதலாவதாக அண்ணன் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆனதற்கும் புதுவையில் அண்ணன் ரங்கசாமியும் இன்று தான் பதவியேற்றார்கள் எனவே அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் என நேற்று முதல் வந்து கொண்டிருக்கிறது. மரியாதைக்குரிய அண்ணன் ஸ்டாலினுக்கு ஒரு கேள்வி ஜாதி, மதம் பிரித்து பார்ப்பவர்களால் திராவிட மனதை புரிந்து கொள்ள முடியாது என்பது உங்களது கருத்து.

இந்துக்களுக்கு நீங்கள் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள் நான் ஒரு தமிழகத்தில் பிறந்த இந்துவாக கேட்கிறேன் எதை வைத்துப் பிரித்து பார்ப்பதால் நீங்கள் தீபாவளி பொங்கலுக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்?. எல்லா மத விழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். எனவே நீங்கள் எப்படி பிரித்துப் பார்க்கிறீர்கள் என்று பதில் சொன்னால் அது நன்றாக இருக்கும்.

இன்று எல்லா அமைச்சர்களும் பத்திரிகையில் இரண்டாண்டு சாதனை குறித்து விளம்பரங்கள் கொடுத்து இருக்கிறார்கள். விளம்பரங்களில் நிதி இருக்கிறதோ இல்லையோ அனைத்திலும் உதயநிதி இருக்கிறார். எனவே வாரிசை உருவாக்கியது தான் ஈராண்டு சாதனை. அறிவிப்பு வருகிறதோ இல்லையோ அறிவிப்புகளை திரும்பப்பெறும் ஆட்சியாக தமிழகத்தில் இந்த ஆட்சி இருக்கிறது.

அண்ணன் வைகோ எந்த நிலையில் இருக்கிறார் என தெரியவில்லை அவர் ஆக்டிவாக தான் இருக்கிறாரா? அவர் காலாவதியான அரசியல்வாதி என நான் சொல்ல மாட்டேன்.

கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் பார்க்கலாம் என இருக்கிறேன். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரானதாக இது சித்தரிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என நினைப்பவர்கள் படத்திற்கு எதிராக இருக்கிறார்கள் தீவிரவாதத்திற்கு எதிராக இருப்பவர்கள் படத்தை ஆதரிப்பார்கள். எனவே அது அவரவர் மன நிலையைப் பொறுத்தது.

பாரத பிரதமர் சொன்னதை போல தீவிரவாதம் எந்த விதத்தில் எந்த இடத்தில் எந்த வகையில் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை ஒத்துக் கொள்ள முடியாது. பெண்களையும் குழந்தைகளும் பாதிப்பதாக இருந்தால் அதன் உண்மை தன்மை தெரிந்து இருக்க வேண்டும். இந்த பிரச்சனை தொடர்பாக கேரள சட்டமன்றத்திலேயே பேசப்பட்டுள்ளது.

இவர்களுக்கு வேண்டிய கருத்தை சொன்னால் அது கருத்து சுதந்திரம் ஆனால் சொல்ல வேண்டிய கருத்தைச் சொன்னால், அதை தடை செய்ய வேண்டும். எனவே இந்த படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதே எனது கருத்து.

கோவையிலிருந்து கனிம வளம் அதிகமாக சென்று கொண்டிருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. கட்டுப்படுத்தப்பட வேண்டிய கொள்ளையில் கனிம வள கொள்ளையும் ஒன்று. தமிழகத்தில் கனிமவள கொள்ளை என்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...