சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் - சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை

சுற்றுலா தலங்களில் குறிப்பாக கடற்கரை, அருவிகள், ஆறுகள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சுற்றுலா துறையும், தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மே.7) வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா இடங்களில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும். திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் காயத்ரி (25), சர்வதர்ஷித் (23), பிரவின்சாம் (23), சாருகவி (23) வெங்கடேஷ் (24) ஆகிய 5 மாணவர்கள், கன்னியாகுமரி லெமூர் கடற்கரைக்கு நேற்று (6-5-2024) சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு 5 பேரும் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பாராட்டி, சீராட்டி மருத்துவப் படிப்பை முடிக்கும் அளவுக்கு வளர்த்து ஆளாக்கிய அவர்களின் பெற்றோர்களை நினைக்கும்போது துயரம் இரு மடங்காகிறது. இந்த கொடும் துயரத்தை அவர்கள் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார்களோ என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டில் கடற்கரைகள், அருவிகள், ஆறுகள், மலைகள் என சுற்றுலா தலங்களில் விபத்துக்கள் நடப்பது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து விழுந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர். கோத்தகிரி மலைப்பாதையிலும் சமீபத்தில் விபத்து நடந்தது. கடல், அருவி, ஆறுகள், குளங்களில் குளிக்கச் சென்று சென்று உயிரிழப்பவர்கள் பற்றிய செய்திகள், 'வெப்பநிலை செய்தி' போல அடிக்கடி வருகிறது. அதுவும் இப்படி உயிரிழப்பவர்கள் அனைவரும் குழந்தைகள், இளைஞர்களாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

நகரங்களில் வசிப்பவர்கள் தான் அதிகமாக சுற்றுலா செல்கிறார்கள். அவர்களுக்கு நீச்சல் தெரியாது. நீர்நிலைகளை பற்றிய புரிதலும் இருக்காது. அதே நேரத்தில் தண்ணீரைக் கண்டதும் அதில் விளையாட வேண்டும் என்று பேரார்வம் இருக்கும். இந்த பேரார்வம் தான் சில நேரங்களில் உயிரையும் பறித்து விடுகிறது. எனவே, சுற்றுலா தலங்களில் குறிப்பாக கடற்கரை, அருவிகள், ஆறுகள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சுற்றுலா துறையும், தமிழக அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் பெரும்பாலான சுற்றுலா தலங்களில் எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை. குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட இருப்பதில்லை. கடலில் விளையாடுபவர்களை கண்காணிக்கவும், அவர்களை எச்சரித்து அனுப்பவும் நீச்சல் தெரிந்தவர்களை தமிழ்நாடு அரசு பணியில் அமர்த்த வேண்டும். ஆபத்தான கடற்கரைகளிலும், கடல் அலை அதிகமாக வீசும் நேரங்களிலும் யாரையும் குளிக்க கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.

அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுகாதாரமான, தேவையான எண்ணிக்கையில் கழிவறைகள், வாகன நிறுத்துமிடம், ஓய்வறைகள், தரமான, நியாயமான விலையில் விற்கப்படும் உணவகங்கள், தேவையான பாதுகாவலர்கள், பெண்கள் உடை மாற்றும் இடங்கள் என அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சுற்றுலா தலங்களில் ஏற்படும் விபத்துகள் உள்ளிட்ட துயரங்களுக்கு மது ஒரு முக்கிய காரணமாகிறது. சுற்றுலா இடங்கள் என்பது குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள் என அனைவருக்குமான கொண்டாட்ட இடங்கள். அங்கு ஒரு சிலர் குடித்து விட்டு வருவது அனைவரது மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.

எனவே, சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும். குடித்து விட்டு வெளியே பிரச்னை செய்பவர்கள், குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு குறிப்பாக மலைப்பகுதிகளுக்கு வரும் வாகனங்கள் சரியான நிலையில் உள்ளதா என்பதையும், ஓட்டுநர் மலைப் பாதையில் ஓட்ட பயிற்சி பெற்றவரா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் எடுத்தால் தான் சுற்றுலா தலங்களில் ஏற்படும் துயரங்களுக்கு முடிவு கட்ட முடியும். அவ்வாறு வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...