கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஈஷா யோகா மருத்துவர் கைது

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் அரசு பள்ளியில் நடைபெற்ற முகாமில் ஈஷா யோகா மருத்துவர் சரவணன் மூர்த்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.


Coimbatore: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடைபெற்ற முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஈஷா யோகா மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈஷா யோகா மையத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் மருத்துவ முகாம்கள் அமைத்து, நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. பல்வேறு கிராமங்களுக்கு சென்று இலவச மருத்துவ முகாம்கள் அமைத்து இலவச மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள் வழங்குதல் போன்ற சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன.

தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலத் துறையினர் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அங்கு நடந்த முகாமின் போது, மாணவிகளுக்கு ஈஷா யோகா மையத்தில் பணியாற்றும் மருத்துவர் சரவணன் மூர்த்தி என்பவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நலத் துறையினர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவர் சரவணன் மூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து செப்டம்பர் 6 அன்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஈஷா யோகா மையத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: "கோவை மாவட்ட கிராமப் பகுதிகளில் அவுட்ரீச் மருத்துவ வாகனத்தில் மருத்துவராக பணியாற்றியவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளதை அறிகிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே ஈஷாவின் உறுதியான நிலைப்பாடு. காவல்துறைக்கு இந்த வழக்கில் முழுமையான ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்."

இந்த சம்பவம் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. அதே நேரத்தில், தன்னார்வ அமைப்புகள் மற்றும் மருத்துவ சேவை வழங்குநர்கள் மீதான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...