கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர் வாகனங்களுக்கு முழுமையான சுங்க விலக்கு வழங்கக் கோரி இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் NHAI-யிடம் மனு அளித்தும் தீர்வு காணப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.83)யில் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்தில் முழுமையான விலக்கு வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுங்கச்சாவடியைச் சுற்றியுள்ள 15 முதல் 20 கிலோமீட்டர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள், விவசாயிகள் மற்றும் தினசரி பயணிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அன்றாடப் பயணத்திற்காக இந்தச் சாலையை பயன்படுத்தும் உள்ளூர் மக்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிப்பது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக டிராக்டர் உள்ளிட்ட விவசாய வாகனங்களை அடிக்கடி இயக்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.



கோமங்கலம் புதூர் அருகே கோலார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடி, ஜூலை முதல் வாரத்தில் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், பாதுகாப்பு தணிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் அதன் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. விரைவில் சுங்க வசூல் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், உள்ளூர் மக்கள் தங்களது எதிர்ப்பை தீவிரப்படுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

“இந்த கோரிக்கை புதிதல்ல. பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் கே. நித்யானந்தன், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூர் மக்களுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (NHAI) பலமுறை மனுக்கள் அளித்து, சுங்கச்சாவடியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்”, என்று மக்கள் தெரிவித்தனர்.



தற்போதைய இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதால், பைபாஸ் சாலையை பயன்படுத்தாத உள்ளூர் மக்கள், விவசாயிகள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளும் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று மனுக்களில் அந்த தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பைபாஸ் சாலை பிரதான சாலையுடன் இணையும் பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளதால், வாகன நெரிசல் அதிகரித்து விபத்து அபாயமும் உருவாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

உள்ளூர் மக்களுக்கு சலுகை பாஸ் வழங்குவது குறித்து அதிகாரிகள் ஆரம்ப கட்டத்தில் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டாலும், அது போதுமான தீர்வாக இருக்காது என்றும், முழுமையான சுங்க விலக்கு மட்டுமே ஏற்கத்தக்கது என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்த கோரிக்கையை NHAI நிராகரித்துள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், உடுமலையில் இருந்துஅந்தியூர் நோக்கி இயக்கப்படும் பேருந்துகள் சுங்கச்சாவடி பகுதியை வெறும் 500 மீட்டர் மட்டுமே பயன்படுத்தி சர்வீஸ் சாலைக்கு திரும்பினாலும், முழு சுங்கக் கட்டணமும் வசூலிக்கப்படும் நிலை உள்ளது. இதேபோல், தினமும் வேலை, கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்தச் சாலையை பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

உள்ளூர் மக்களுக்கு சுங்கக் கட்டணத்தில் முழுமையான விலக்கு வழங்க வேண்டும் என உடனடியாக அறிவிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், அரசு தலையிட்டு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என எச்சரித்தனர்.

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி, ₹4,699 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 132 கிலோமீட்டர் நீளமுடைய பொள்ளாச்சி–திண்டுக்கல் நான்கு வழிச்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில், ₹1,772 கோடி செலவில் அமைக்கப்பட்ட 50 கிலோமீட்டர் நீளமுடைய மடத்துக்குளம்–பொள்ளாச்சி சாலைப் பகுதியில் இந்த சுங்கச்சாவடி நிறுவப்பட்டுள்ளது.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...