ஒடுக்கப்படும் சமுதாயத்தால் மயானத்தில் நிம்மதியை தேடிய திருநங்கை

சாதி, மதம் என்று பேதம் பார்க்கும் சமுதாயத்தின் இழிவுகளில் இருந்து சற்றே மீண்டு வந்த நிலையில், தற்போது திருநங்கைகளையும் தீண்டத் தகாதவர் போல சித்தரித்து, அவர்களுக்கு தவறான பாதையை உருவாக்கித் தருகிறது மனிதநேயமற்ற இந்த சமூகம்.

கோவை: சாதி, மதம் என்று பேதம் பார்க்கும் சமுதாயத்தின் இழிவுகளில் இருந்து சற்றே மீண்டு வந்த நிலையில், தற்போது திருநங்கைகளையும் தீண்டத் தகாதவர் போல சித்தரித்து, அவர்களுக்கு தவறான பாதையை உருவாக்கித் தருகிறது மனிதநேயமற்ற இந்த சமூகம். அப்படிபட்ட சூழலில் இருந்து கொண்டு உயிரற்ற மக்களையும் பூலோகத்தில் இருந்து மரியாதையுடன் அனுப்பி வைக்கும் ஒரு திருநங்கையின் குணத்தை இப்போது பார்க்கலாம்.

ஒரு காலகட்டத்தில் திருநங்கைகள் யாசகம் செய்பவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாகவும் எண்ணி அவர்களை முன்னேற விடாமல் ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இந்த சமுதாயம் வைத்திருந்ததை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், இக்காலகட்டத்தில் அவர்களில் சிலர், நாங்களும் சக மனிதர்கள் தான் என்று தங்களுடைய சுயத்தை வளர்த்துக் கொண்டு பெரும் போராட்டத்துடன் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து காட்டுகிறார்கள்.

பலர் படித்து, நல்ல உத்யோகத்திலும் மட்டும் அல்லாமல் காவல்துறை, விளையாட்டுத்துறை, மருத்துவத்துறை மற்றும் இப்பொழுது அரசியலிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள திறமைகளுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்று சவால் விட்டுக் கொண்டு தங்களது திறமைகளையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 

பல போராட்டங்களுக்கு மத்தியில் சில திருநங்கைகள் முன்னேற்றம் கண்டுவிட்டாலும் கூட இன்றும் பல இடங்களில் திருநங்கைகளை உதாசீனம் செய்து கொண்டு அசிங்கப்படுத்தி ஒதுக்கி வைத்துதான் வருகின்றனர். இப்படி ஒதுக்கப்பட்ட ஒரு இளம் திருநங்கையை முன்னேற வழி கொடுக்காமல் சுடுகாட்டிற்குள் தள்ளி வைத்துவிட்டது இந்த சமூகம்.

சக மனிதர்களே மயானத்திற்குள் செல்ல அச்சப்படும் பொழுது, கோவையில் உள்ள சொக்கம்புதூர் மயானத்தில் மயான பணி செய்யும் ஒரு அற்புத பிறவியாக ஒரு திருநங்கையை காண முடிகிறது. அக்‌ஷயா (21) என்ற திருநங்கை தனியொருவராக மயானத்தில் சடலத்தை புதைப்பதற்கு புதை குழி வெட்டுகிறார். குழிக்குள் இறங்கி சடலத்தை குழிக்குள் இறக்கி வைத்து இறுதி பணிகளை மிக மரியாதையுடன் செய்கிறார். அது மட்டும் இல்லாமல் நடுஇரவு என்று கூட பாராமல் சடலத்தை தனியொருவராக இருந்து எரியூட்டிடவும் செய்கிறார். 

இதை நேரில் பார்த்து அவரிடம் சென்று விசாரித்த பொழுது அவர் பட்ட துன்பங்களை கூறி நமது கண்களை குளமாக்கி விட்டார். 

"நானும் சக மனிதர்களை போல ஒரு பிறவி தானே என்னை மட்டும் ஏன் இந்த சமூகம் இப்படி ஓட ஓட விரட்டுகிறது. நான் திருநங்கையாக பிறந்தது என்னுடைய குற்றமா..?. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுதுதான் நான் ஒரு திருநங்கை என்று எனக்கு தெரியவந்தது. என்னுடைய நடையுடை பாவனைகளை கண்டு சக மாணவர்கள் மட்டும் இல்லாமல் ஆசிரியர்கள் வரை என்னை கேளி செய்து எனது படிக்கும் ஆர்வத்தையே குழி தோண்டி புதைத்து விட்டார்கள். 

அதனைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த உடன் பிறந்த சகோதரர்கள் என்னை புறக்கணித்து அவர்களுடன் சேர்ந்து இருக்க விடாமல் தனிமை படுத்தினார்கள். யார் ஒதுக்கினாலும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஒதுக்கி விடமாட்டார்கள் அரவணைப்பார்கள் என்று பார்த்தால், காலப் போக்கில் தாய்ப்பாசத்திற்கும் உனக்கு இடம் இல்லை என்று பெற்றோர்களால் விரட்டப்பட்டேன். 

பசி என்ற வியாதிக்கு மருந்து தேடி சென்ற இடம் எல்லாம் விஷம் கலந்த வார்த்தைகளை அள்ளிக் கொடுத்தார்கள். அதை உண்டு உயிரை மாய்த்துக் கொள்ள மனம் இல்லை. வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நானும் மண்ணில் பிறந்த மனுஷிதான். எல்லோருக்கும் இருக்கும் அனைத்து உரிமைகளும் எனக்கும் இருக்கிறது. அர்த்தநாரீஸ்வரர் கடவுள் என்றால் வணங்குகிறார்கள், ஆனால், அரவாணிகள் என்றால் ஓட ஓட விரட்டி அடிக்கிறார்கள். இவர்கள், மத்தியில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. எந்த வேலை செய்தால் என்ன, செய்யும் வேலையில் உண்மை நேர்மை இருக்க வேண்டும் என்று வேலை தேடி அலைந்தேன். 

அந்த நேரத்தில் தான் சொக்கம்புதூர் மயானத்தில் வெட்டியானாக வேலை செய்யும் வைரமணி அம்மாவின் தொடர்பு கிடைத்தது. அவரிடம் நான் என்னுடைய நிலையைப் பற்றிக் கூறினேன். அவர் அன்புடன் என்னை ஏற்றுக் கொண்டு, எல்லோர் வழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் இந்த மயானத்தில் எனக்கு ஒரு தொடர் புள்ளியை கொடுத்து வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தார்.

ஒன்றரை வருடங்களாக ஈரநெஞ்சம் அறக்கட்டளையில் என்னை இணைத்துக்கொண்டு வைரமணி அம்மாவுடன் இந்த மயானத்தில் சடலங்களை புதைப்பதும், எரிப்பதும் செய்து கொண்டு இருக்கிறேன். இந்த பணியில் எனக்கு எந்த பயமும் இல்லை. நான் இந்த பணியில் இருக்கும் பொழுது என்னை சந்திப்பவர்கள் அவர்களையும் அறியாமலேயே எனக்கு ஒரு தனிமரியாதை கொடுப்பதையும் உணருகிறேன். எனக்கு இந்த வாழ்வே போதும். இந்த சமுதாயம் என்னை ஒதுக்கி வைத்தாலும், இந்த பணி செய்வதற்கு பெரும் பாக்கியம் செய்ததாக எண்ணுகிறேன்." என்றார் திருநங்கை அக்‌ஷயா உள்ளம் உறைந்தும், நிறைந்தும் நின்றோம். அக்‌ஷயாவை வாழ்த்துவதா வணங்குவதா தெரியவில்லை. அவரிடம் கற்றுக் கொண்ட பாடங்கள் நிறைய... அவர் ஆசானாக தோன்றுகிறார். அக்‌ஷயா என்ற இந்த திருநங்கை, திருநங்கைகளுக்கு மட்டும் இல்லாமல் அவரை ஒதுக்கிய மனிதர்களுக்கும் ஒரு எடுத்துக் காட்டாக இருக்கிறார். இறைவன் படைப்பில் எந்த ஒரு படைப்புமே அர்த்தமற்றதாக இல்லையே. மண்ணில் பிறந்த அனைவருக்குமே வாழ்வதற்கு உரிமை உள்ளது. 

அதை உணராத மக்களிடம்தான் மனிதநேயம் மடிந்து கொண்டு இருக்கிறது. அக்‌ஷயா போன்ற இன்னும் எத்தனையோ மலர்களை மலர விடாமல் தடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் மனிதவேடத்தில் உள்ள சில வேலிகள். "என்று தான் தணியுமோ இந்த மனிதநேய தாகம்..!?"

Newsletter

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...