கோவையில் நோய்வாய்ப்பட்டுள்ள வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்ய வேண்டும்


கோவை சிறையில் இன்று ஆயுள் சிறைவாசி அப்துல் ஒசீர் மரணம் தொடர்பாக கோவை சிறையில் நோய்வாய்ப்பட்டுள்ள வாழ்நாள் சிறைவாசிகள் அனைவரையும் தமிழக அரசு விடுதலைச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பத்திரிகை அறிக்கை இன்று வெளியிட்டுள்ளார்.

 

 கோவை மத்திய சிறையில் ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வந்த இதய நோயாளியான அப்துல் ஒசீருக்கு இன்று காலை கடும் மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார். சிறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு பிறகு கோவை அரசினர் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது, ஏற்கெனவே இதய நோயாளியாக இருந்த அப்துல் ஒசீர் தனது இறுதி நாட்களை சிறையிலேயே கழித்து மரணம் அடைந்துள்ளது வேதனைக்குரியதாக உள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து விட்ட சிறைவாசிகளை விடுதலைச் செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் மற்றும் சமுதாய அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றன. கடந்த 14வது தமிழக சட்டமன்றத்தில் இந்த கோரிக்கையை பல முறை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக முன்வைக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.

குறைந்த பட்சம் கடும் நோயினால் அவதிப்படும் ஆயுள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலைச் செய்யவும் தமிழக அரசிடம் பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இந்த கோரிக்கைகளை ஆளும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இதன் விளைவாக சமீப காலமாக ஆயுள் சிறைவாசியாக கோவை சிறையில் மட்டும் மரணித்த முஸ்லிம்களில் அப்துல் ஒசீர்  மூன்றாவது நபர் ஆவார். தஸ்தகீர் என்ற ஆயுள் சிறைவாசி குடல்வால் அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறையில் முறையான தொடர் சிகிச்சைகள் இல்லாததால் மரணித்தார். இதே போல் 17 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்த சபூர் ரஹ்மான் (20 வயதில் சிறைக்குச் சென்றவர்) தனது 37 வது வயதில் சிறையிலேயே இதய நோயினால் மரணித்தார். தற்போது 19 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்த அப்துல் ஒசீர் இதய நோயினால் பாதிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவிக்கும் நிலையில் மரணித்துள்ளார். இன்னொரு ஆயுள் சிறைவாசி சிறையிலேயே மரணிக்கும் முன் தமிழக அரசு உடனடியாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள அனைத்து சிறைவாசிகளையும் விடுதலைச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

ஆண்டுதோறும் தமிழக சிறைகளில் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்படும் சிறையிலேயே சராசரியாக 60 பேர் மரணிக்கின்றார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. தமிழ்நாடு சிறைவிதிகளின் படி கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகளை விடுவிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு. இந்த அடிப்படையில் சிறையில் நோய்வாய்ப்பட்டுள்ள அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு சிறைவிதிபடி ஆயுள்தண்டனை பெற்ற 65 வயதுக்கு மேலான முதியவர்களையும் விடுதலை செய்யவேண்டும். இரண்டு பெண் மகளுக்கு தந்தையான அப்துல் ஒசீரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

 சகோதரர் அப்துல் ஒசீர் அவர்களை இழந்து பரிதவிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...