அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்துக - தமிழக அரசுக்கு டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

உடுமலையில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, நலிவடைந்த அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த தமிழக அரசு 250 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.



திருப்பூர்: வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்க்கும் தமிழக அரசு, நலிவடைந்த அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். 

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமைந்துள்ள தமிழகத்தின் முதல் சர்க்கரை ஆலையான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன், தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதை கண்டித்தும், தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வரும் நிலையில் தொழிலாளர்களும், விவசாயிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 



இந்நிலையில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், தலைவருமான கிருஷ்ணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். 



அப்போது, அதிகாரிகளிடம் கரும்பு அரவை மற்றும் உற்பத்தி குறித்தும், ஆலையின் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, 



அமராவதி சர்க்கரை ஆலையில் பல ஆண்டுகளாக நிர்வாக சீர்கேடுகள் நடக்கிறது. ஆண்டிற்கு 4 லட்சம் டன் ஆக இருந்த அரவை திறன் தற்பொழுது 30,000 டன் அரைப்பதே சவாலாக உள்ளது. 

தமிழக அரசு அமெரிக்கா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் முதலீடு செய்வதை தவிர்த்து விட்டு தமிழகத்தில் உள்ள இதுபோன்ற பழமையான நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

முன்பு தினமும் 2000 டன் ஆக இருந்த கரும்பு அரவை தற்பொழுது 500 டன் ஆக குறைந்து உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் மிகவும் பாதிப்படைகின்றனர். அவ்வப்போது போராட்டங்கள் நடத்துகின்றனர். 

குறிப்பாக சர்க்கரை ஆலைக்கு சம்மதம் இல்லாத மேலாண்மை இயக்குனரை நியமனம் செய்யப்பட்டதே காரணமாகும். தற்போது இவர் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டுள்ளனர். சர்க்கரை ஆலையை புனரமைக்க தமிழக அரசு 250 கோடி வழங்க வேண்டும். இதுபோன்ற ஊழல்கள் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...